Blog Archive

Thursday, April 26, 2018

மதுரை 1955 சித்திரை

Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
ஈசன் அடி  போற்றி.
இளங்காலை பசும் தென்றல் வயல் வெளியிலிருந்து கிளம்பி வரும்போதே குரல் கொடுப்பார் பாட்டி. இடம் பழங்காநத்தம்.

 திருமங்கலத்தில்   இருந்து அங்கே வருவதற்குசித்தப்பாவின்JEEPவந்துவிடும். பனிரெண்டு மைல்.

இரண்டே செட் துணிமணிகள்.
ரங்கன்  இந்தப் பயணங்களுக்கு கிடையாது. முதலில் ஜீ ப்பில் ஏறுவது அவன் தான்.
அப்பா அவனை வேறு இடம் அழைத்துப் போவதாகச் சொல்லி இறக்கி விடுவார்.


மூன்று  வயதுக்கு குழந்தைக்கு என்ன தெரியும்.
அவனே மானஸீகமாக வண்டி ஒட்டிக் கொண்டு வீட்டிற்குள் போய் விடுவான்,.
எங்களுடன் உத்ஸாகப் பேசியபடியே சித்தப்பா வண்டி ஓட்டும் அழகை நான் பார்ப்பேன்.
வண்டி குதித்து ஏறி இறங்கும் போதெல்லாம் குதுகலம் .

பழங்காநத்தம் வந்ததும்  பாட்டி தாத்தா ராஜ்ஜியம்.

அங்கே பின்புறத்தில் சித்தப்பா  குடும்பம். அதாவது பாட்டியின் தங்கை குடும்பம்.

அதைத்தவிர இன்னும் ஆறு வீடுகள் இருந்தன.
 தாத்தாவின் முதல் வரவேற்பு முரளிக்குத்தான்.

என்னடா  பளிச் பளிச்ன்னு பதில் சொல்றயா என்பார்.
என்னை  பார்த்ததும் ,கைகால் அலம்பிண்டு
பாட்டிக்கு   உதவி பண்ணு .
 அப்பத்தான்கீரைக்குழம்பு கிடைக்கும் என்றதும் நான் உள்ளே ஓடிவிடு வேன் .

சித்தப்பா அறையில் ஒரு நல்ல பெரிய  ஜன்னல் இருக்கும். அதன் வழிபார்த்தால்    பக்கத்து வயல் வெளியில் நடக்கும் வேலைகள் தெரியும். அறுவடை முடிந்ததும்
அங்கே சினிமாக் கொட்டகை வந்துவிடும்.
சாயந்திரமானால் ராஜா ராணி வசனங்கள் கேட்கும். கலர் கலராக டிக்கெட்டுகள் வாங்கி  மக்கள் உள்ளே செல்லும் காட்சி தெரியும். அங்கு திரையிடப்பட்ட அத்தனை படங்களின் வசனமும்
எனக்கு அத்துப்படி.

அங்கே படம் பார்க்காதது எனக்கு வருத்தம் தான்.😊😊😊
சிவாஜி கணேசனின் அசோகா நாடகம், பிள்ளைக்கனியமுது படப்பாடல்கள் எல்லாம் காதில் விழும்.


கொசு தொந்தரவு நிறைய ஆனதும் சித்தப்பா கறுப்புத் தார் அடித்த தட்டிகள் போட்டு மறைத்து விட்டார்.

அந்த நாட்களில் காலை எழுந்திருப்பது, உமிக்கரியில் பல் தேய்க்கவே.
 தாத்தா ஒரு பக்கம் சந்தியா வந்தனம் செய்வார்.
பாட்டி வந்து வேப்ப மரத்தில் இருந்து கொழுந்துகளாகப் பறித்து
எங்கள் இருவருக்கும் முதல் உணவாகக் கொடுப்பார்,.

பால் வந்ததும் பாட்டி காய்ச்சி முடிப்பதற்குள், தாத்தா இருவருக்கும் இரண்டு பேரி ச்சம்பழங்கள் கொடுத்து, ஒரு நல்ல மலை வாழைப்பழமும் கொடுப்பார்.


பிறகுதான் காப்பி.  காப்பியில்
 நுரையே இல்லியே என்று கேட்பேன்.
இந்தப் பாட்டி நக்கலாகப் பேசுவார்.
மாடு விளக்கெண்ணெய்  சாப்பிட்டதாம். அதனால் தான் பால் நுரைக்கலைன்னு சிரிக்காமல் சொல்வார்.

அதற்குள் தாத்தா வாசலில் கொட்டகையின் கீழ் ஈஸி சேரில்
படுத்துக் கொண்டு எங்களை அன்று வந்த தினசரிகள், மஞ்சரி, லிப்கோ புத்தகங்களை வரிசையாகப் படிக்கச் சொ ல்வார். தம்பிக்கு வயது குறைவுதான் என்றாலும்  எழுத்துக்கு கூட்டிப் படித்து விடுவான்.
அடுத்தாற்போல் மாகாணி,வீசம் என்று வாய்ப்பாடு.

பாதி முடித்ததும் பாட்டி ,பழையது பிசைந்து வைத்துக் கொண்டு கையில்   இலையை ஏந்தி சாப்பிடக் கூப்பிடுவார்.

உனக்கு குழந்தைகள் படிப்பைக் கெடுப்பதே வேலை.
இன்னும் கொஞ்சம் நேரம் போனால் என்ன.
கவனம்  கெட்டது பார் என்று அதட்டுவார்.

பாட்டி அதை எல்லாம் லட்சியமே செய்ய மாட்டார்.
//எட்டுமணிக்குச் சாப்பிட்டு அதுகளுக்கு வழக்கம்.
பாவம் குழந்தைகள் //
😢என்று தயிர் , முந்தைய நாள் ரஸ மண்டி கலந்த தயிர் சாதத்தை, கைகளை உருட்டிப் போடுவார்.

  சட்டியில் உணவு தீர்ந்ததும் அதில் சாத்தேர்த்தம் என்று இன்னும் தண்ணீர்
விட்டுத் தானும் குடித்துவிடுவார்.
தாத்தாவுக்கு த்ரெப்டின் பிஸ்கட் தான் காலை உணவு  .
தாத்தா எங்களைக் குளிப்பாட்ட பொதுக் கிணற்றடிக்கு அழைத்துச் செல்வார்.

அவர் வந்தால் அங்கிருக்கும் பெண்மணிகள் நகர்ந்து விடுவார்கள்.

இந்த பாக்கியம், தாத்தா தண்ணீர் இறைத்து எங்கள்  மேல்விட லைப் பாய் சோப் வைத்துத் தேய்த்துக் கொண்டு குளிக்கும் பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கும்.
  இன்று என்னருமைத் தாத்தாவின் படம் ஒன்று கூட என்னிடம் இல்லை.

இந்தா , குட்டி ,,,சொம்பில் பாட்டிக்குத் தண்ணீர் எடுத்துக் கொண்டு போ என்று கொடுப்பார்.
நானும் தம்பியும் அம்மா கொடுத்திருந்த சிவப்புத துண்டை இடையில் கட்டிக் கொண்டு வீட்டுக்கு  வந்து விடுவோம்.

பாட்டி மண் அடுப்பில் சமைக்கும் குழம்பு வாசனை வீட்டைத் தூக்கும். ஆண்டா, இன்னிக்குச் சந்தைக்குப் போய் எல்லாம் வாங்கிண்டு வரலாம்.
இப்போதைக்கு குழம்பும் கீரையும் வடாமும் தான்
என்பார் பாட்டி.

மத்தியானம் சித்திரைத் திருவிழாவுக்கு டவுனுக்குப் போகலாம்.

தாத்தாவும் முரளியும் இங்க இருக்கட்டும் என்பார் ரகசியமாக.
பிறகென்ன சுவாரஸ்யம் தான். தொடரும்.


இந்தப்  பதிவில் ஏகப்பட்ட   எழுத்துப் பிழைகள் . அதைப் படித்து
எனக்கு சொன்ன  எங்கள்  ப்ளாக்  ஸ்ரீராமுக்கு   மனம் நிறைந்த நன்றி,

10 comments:

ஸ்ரீராம். said...

உண்மையிலேயே மிகவும் சுவாரஸ்யமான நாட்கள். நினைத்து முயற்சித்தால் கூட இனி இந்த மாதிரி நாட்கள் கிடைக்காது.

ஸ்ரீராம். said...

எம் எஸ் அம்மாவின் "அந்த நாளும் வந்திடாதோ..." வரிகள் மனதில் ஓடுகின்றன.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
முதன் முதலில் படித்துப் பார்த்துப் பிழைகளைத் திருத்த வைத்ததற்கு மிக நன்றி. ப்ளாகர்
இவ்வளவு சொதப்பும் என்று பார்க்காமல் விட்டேன்.

உண்மைதான். களங்கம் இல்லாத நாட்கள் அவை. எளிமையான நாட்கள். தாத்தா மாதிரி பார்க்கவே முடியாது.

மிக மிக நியாயம் பார்த்துக் காரியங்கள் செய்வார்.

வல்லிசிம்ஹன் said...

சீத்தலைச் சாத்தனார் இருந்தால்
தலையே வெடித்திருக்கும் அவருக்கு.நன்றி ஸ்ரீராம்.

வெங்கட் நாகராஜ் said...

அன்பு நெஞ்சங்கள்.... இந்த மாதிரி மனிதர்கள் தான் நமக்கு புத்துணர்வு தருபவர்கள்....

அன்பும் பாசமும் சூழ் உலகு.

நெல்லைத் தமிழன் said...

இந்த நாட்கள் மீண்டும் வராதோ என்று தோன்றும். எனக்குமே என் இளமைக் காலங்கள் மீண்டும் வராதா என்று தோன்றும் (அதில் கஷ்டம், சாதாரண சாப்பாடு என்று ஏகப்பட்ட கஷ்டங்கள் இருந்தாலும், இப்போது நினைக்கும்போது அந்த வாழ்வுக்கு ஈடு ஏது என்று தோன்றுகிறது)

பழங்கானத்தம், வயல் - இவையெல்லாம் இப்போது ஏது? பி.ஜி படிக்கும்போது மதுரையில் இருந்த நாட்களும், என் பெரியப்பா வீடு மதுரையில் இருந்ததும் (அவர் டி.வி.எஸ் இல் வேலைபார்த்தார்) நினைவுக்கு வருகின்றன.

பதிவை ரசித்தேன்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் வெங்கட், தாத்தா பாட்டிக்கு பாரபட்சமே கிடையாது.
தாரக மந்திரம் போல ஒரே ஒரு அட்வைஸ். சொன்ன பேச்சை கேட்கணும். எதிர்த்துப் பேசக்கூடாது..

நாங்களும் மீற மாட்டோம். மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளி. மதுரையில் படித்தீர்களா.
அட. பழங்கா நத்தம் வயல்கள் வீடுகளாகிவிட்டன.
பை பாஸ் வந்து ஊரின் அழகே போச்சு.

எங்க சித்தப்பா...இப்போது திருனாட்டுக்கு ஏளியாச்சு.
டிவிஎஸ் இல் 1968 வரை ஆஃபீஸ் மானேஜராக இருந்தார்.
உங்க பெரியப்பா ரிடயராகிட்டாரா. என்ன பெயர்.
ஓ ரொம்ப கேள்வி கேட்கிறேன்.
யாராவது தெரிந்தவர்களாக இருக்கக் கூடுமோன்னு ஆசை.
எங்கள் வீட்டில் அப்பாவைத்தவிர எல்லாரும் டிவிஎஸ் தான்.

அம்மாவுடைய கசின் கோட்டயத்தில் இருந்தார். இப்போ அவர்
பையன்கள் தனி ஏஜன்சி வைத்து நடத்துகிறார்கள்.
அவர் ராகவன் .இப்ப இல்லை.
1966 க்கு அப்புறம் 93 இல் மதுரை போனோம். கனவுகள் கலைந்து விட்டன.
மிக ஏமாற்றம்.

Thulasidharan V Thillaiakathu said...

துளசிதரன்: எனக்கு என் தாத்தா பாட்டி என்று எஞ்சாய் செய்ததில்லை.. ஆனால் நான் பிறந்து வளர்ந்த கிராமமான தேனீ அருகில் இருக்கும் ராசிங்கபுரத்து நினைவுகள் வந்தன. இனிய நினைவுகள்.

கீதா: //இந்த பாக்கியம், தாத்தா தண்ணீர் இறைத்து எங்கள் மேல்விட லைப் பாய் சோப் வைத்துத் தேய்த்துக் கொண்டு குளிக்கும் பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கும்.
இன்று என்னருமைத் தாத்தாவின் படம் ஒன்று கூட என்னிடம் இல்லை.
// அம்மா நான் என் தாத்தா பாட்டியுடன் நிறைய எஞ்சாய் செய்திருக்கேன் இது போன்றே.....எனக்கும் அப்படியே அந்த நினைவுகள் வந்தன....இனிமையான காலம் அது. பல சமயங்களில் தோன்றும் அபப்டியே இருந்திருக்கக் கூடாதா என்று....உங்கள் நினைவுகள் ரொம்பவே ஸ்வீட்!!! அப்படியே காட்சிகளாய் விரிகிறது...என் பாட்டியும் கீரைக் குழம்பு அப்புறம் கையில் பழையது ரசமண்டி கலந்து போடுவார். சாதத்தில் நீர் கலந்து தானும் சாத்தேர்த்தம் என்று வார்த்துக் கொள்வது இந்த வார்த்தைகள் எல்லாம் பாட்டி பயன்படுத்துவார். அப்படியே....

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா, தாத்தா பாட்டி அன்பு உன்னதமானது.
நீங்கள் அனுபவித்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்பு துளசி,
உங்களுக்கு தாத்தா பாட்டியின் அன்பு அனுபவம்
இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது.
பரவாயில்லை நீங்கள் வரப்போகும் தலைமுறையிடம்
அந்த அன்பைச் செலுத்துங்கள்.