Blog Archive

Sunday, October 01, 2017

வாராய் என் தோழி. #கடிதங்கள்.... 1

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
அன்பில் தோய்ந்த கடிதம். ்
டிசம்பர் 1965. திருமணம் நிச்சயமாயிற்று என்ற
கடிதம் கிடைத்ததும் என்னைப்  பார்க்க ஆசையாய்
என் தோழி அறுமுகத்தாய் எழுதிய கடிதம். ரெட்டியபட்டிக்கு ,,
தன அண்ணன்  குழந்தைகள் நாகலட்சுமி, சங்கரபாண்டியன்,ஸ்ரீநிவாசன் எல்லோருக்கும் முடி இறக்க  வருவதாகவும், பசுமலை ரயில்வே ஸ்டேஷனில் வந்து பார்க்கும்படியும், முடிந்தால் தன்னுடன் விருதுநகர் வரை வந்து இருக்கும்படியும் எழுதி இருக்கிறாள்.
எத்தனை ஆவலாதி. என்ன ஒரு ஆதுரம்.

இத்தனை நல்ல தமிழில் கடிதங்கள் நாங்கள் எழுதிக் கொண்டோம் என்று தெரிய வியப்பாக இருக்கிறது.
சென்னை  வந்த பிறகுதான் இதெல்லாம் மாறி இருக்க வேண்டும்.

இடங்கள் மாறும்போது மனம் மட்டும் அங்கே தங்கி விடுகிறதே. தன்  சோமு  அண்ணாவின் மீது  அத்தனை பாசம் அவளுக்கு.
திருமணமாகி ஆரணிக்கு வந்தாள் .
மூன்று   குழந்தைகள் பிறந்து, அவர்கள் பட்டப்  படிப்பு முடிக்கும் வரை தொடர்பிருந்தது .
கடைசியாக  1996 இல் சந்தித்தோம்.
MSPM SANGU  NAADAAR , INDIAN DRUGS  SHOP
என்கிற விலாசம் மட்டும் மறக்கவில்லை.

விருதுநகருக்கே சென்று விடுவதாக கடைசிக் கடிதம்.
ஒரு கணம் தோன்றுகிறது , திண்டுக்கல் ,விருது நகர் என்று போய்ப் பார்க்கலாமா  என்று.

எல்லாத்   தோழிகளும் அருமையானவர்களே. இவள் என் மேல் உயிரையே வைத்திருந்தாள்.
அவளுக்குச் சாப்பாடு எடுத்துக் கொண்டு பள்ளி வரும்
ஆயா கூட என்  முகத்தை வழித்து  செல்ல முத்தமிட்டது
நினைவிருக்கிறது.
நல்லதொரு நினைவுகளைத் தருவிக்க கடிதத்துக்கு நன்றி. எங்கிருந்தாலும் நலமாக இரு என் தோழி. சாந்தி என்கிற ஆறுமுகத்தாய்.

17 comments:

நெல்லைத் தமிழன் said...

காலத்தைப் பின்னோக்கி இழுத்துச் சென்றுவிட்டீர்கள்.

ஸ்ரீராம். said...

நட்பின் நினைவுகள் இனிமையானவை. இளமைக்காலத்தை இசைத்துப் பார்ப்பவை.

கோமதி அரசு said...

அருமையான அன்பில் தோய்ந்த கடிதம் படித்து மகிழ்ச்சி அடைந்தேன்.
என் தோழிகள் சந்திரகாந்தா, சரஸ்வதி இருவரும் நீண்ட காலம் எனக்கு குழந்தைகள் பிறந்த பின்னும் கடிதம் எழுதிக் கொண்டு இருந்தார்கள். அப்புறம் தொடரபு விட்டு போனது.
இரண்டு வருடங்களுக்கு முன் சந்திரகாந்தா அண்ணனை பார்த்தேன் மதுரையில். விசாரித்த போது சந்திரகாந்தாவின் போன் ந்மபர் கொடுத்தார், நீண்ட நேரம் பேசி மகிழ்ந்தோம்.

Geetha Sambasivam said...

திருமணத்தின் பின்னும் தொடரும் நட்பு என்பது அதி அற்புதம். அருமையான தோழி.

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country said...

உங்கள் தோழியின் கடிதத்தைப் படித்தேன். நெகிழ்ந்துபோனேன். பாதுகாத்து, ரசித்து, அனுபவித்து எழுதிய உங்களின் பெருமனம் பாராட்டுக்குரியது. நாம் தொலைத்தனவற்றில் ஒன்று கடிதம் எழுதுவதும்கூட. கையால் கடிதம் எழுதுவதில் கிடைக்கும் சுகம் வேறு எதில் இருக்கிறது. இன்னும் நான் நண்பர்களுக்கு கடிதம் எழுதுவதைத் தொடர்கிறேன் என்பதைப் பெருமையோடு கூறிக்கொள்கிறேன். பெரும்பாலும் சுருக்கமாக அஞ்சலட்டையில் எழுதுகிறேன். சிலர் கிண்டல் செய்தால்கூட கோபித்துக்கொள்வதில்லை.

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா அருமையான நட்பும் அன்பும் தோய்ந்த கடிதம். ஒரு வேளை இதை வாசிப்பவர்கள் மூலம் உங்கள் தோழி மீண்டும் கிடைக்கலாம் என்றும் தோன்றுகிறது. முகநூலில் கூட நீங்கள் சொல்லிப் பார்க்கலாமோ?!!!

எங்கள் பழைய நினைவுகளை மீட்டெடுத்தது. எங்கள் நெருங்கிய நட்புகளையும் தேடிக் கொண்டிருக்கின்றோம். அருமையான பகிர்வு

துளசிதரன், கீதா

Angel said...

வாவ் சூப்பர் வல்லிம்மா ..யார் மூலமாவது மீண்டும் அவங்களை தொடர்பு கொள்ள ட்ரை பண்ணுங்க பழைய நட்புக்கள் சந்திப்பது இனிமை ..நானும் என்னோட பழைய டைரி தேடி எடுத்து நட்புக்களை காண்டாக்ட் செய்யப்போறேன் உங்க பதிவை பார்த்ததும் ஆசையா இருக்கு

ராமலக்ஷ்மி said...

எனக்கும் தோழிகளோடு கடிதப் பரிமாற்றம் இருந்தது.

உங்கள் தோழியும் உங்களைப் பற்றி நினைத்துக் கொள்ளக் கூடும். இனிய நட்பு எங்கிருந்தாலும் மற்றவர் நலம் நாடும். அருமையான பகிர்வு.

வல்லிசிம்ஹன் said...

ஒரு புதையல் போலக் காத்து வந்தேன் அன்பு நெல்லைத்தமிழன்.
சென்னையிலேயே இருந்து படித்த என் மகன்களும் மகளும்
அத்தனை நபர்களுடனும் வாட்ஸ் ஆப்பில் தொடர்பில் இருக்கிறார்கள்.
ஊர்விட்டு ஊர் மாற்றும் வேலையில் அப்பா, மற்றும் என் கணவர் இருந்ததால்

பல நட்புகள் விட்டுப் போயின.
இப்போது வலை நட்புகளையாவது இருத்திக் கொள்ள வேண்டும் என்கிற
Wish தான்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ஸ்ரீராம் அன் கண்டிஷனல் லவ்.
இது போல இனிப் பார்க்க முடியாது.

வல்லிசிம்ஹன் said...

நன்றி பரிவை குமார். உங்கள் நட்பும் இது போலத்தான். நான் பல் தளங்கள்
சென்று படிப்பதையே விட்டு விட்டேன். அப்படி இருந்தாலும் பொருட்படுத்தாது வந்து படிக்கிறீர்கள்.
இந்த அன்பு போதும். நன்றி.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் கீதா.
அவளுடைய கவலை ,கணவரது உடல் நிலை பற்றிதான். பெண்கள் நன்கு
வேலையில் அமர்ந்து விட்டார்கள். பையனின் திருமண அழைப்பும் வந்தது.
பிறகு தொடர்பே இல்லை. அவள் நலமாக இருக்கணும்.

msuzhi said...

சேமித்து வைத்திருப்பது ஆச்சரியம்..

வல்லிசிம்ஹன் said...

இனிமையானவள் என் தோழி. சற்றே கட்டுப்பாடு அதிகம் உள்ள குடும்பம்.

30 வருடங்கள் கழித்து அவளைப் பார்த்ததில் அதிர்ந்து போனென்.
கடவுள் அவளைக் காக்கட்டும்.
மிக நன்றி சோழ நாட்டில் பௌத்தம்.
தொடர்ந்து கடிதம் எழுதுங்கள். வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசிதரன் ,கீதா,
நீங்கள் எல்லோரும் இப்போதைய பொக்கிஷங்கள்.

என் தோழி வலைப்பக்கம் எல்லாம் வரமாட்டாள். கட்டுப்பாடுகள் அதிகம்.
என் பள்ளித்தோழிகள் யாராவது விருது நகரில் இருந்தால் கண்டு கொள்வார்கள்.
மனம் கசிகிறது அவள் எப்படி இருக்கிறாளோ என்று நினைத்து.
நன்றாக இருக்கட்டும். நீங்கள் காலம் தாழ்த்தாமல் பிரியமானவர்களைத் தேடிப் பிடியுங்கள்.

அன்புக்கு நன்றி மா. வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சலின் , உடனே செய்யுங்கள். நமக்குத் தெரியும் நம் அன்பு வட்டம் எத்தனை நெகிழ்வானது. குற்றம் இல்லாதது என்று.
உங்கள் நட்புகளும் அப்படியே இருப்பார்கள். தோழிகள் சீக்கிரம் கிடைக்க
ஆசிகள். அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி,
உண்மையான அன்பு என்றும் விலகுவதில்லை.
என் வாழ்க்கையில் இத்தனை மாற்றம் என்று தெரிந்தால் துடித்துப் போவாள்.
அதே போல் அவள் நலமாகத்தான் இருக்க வேண்டும் என்று இறையை வேண்டுகிறேன். ராமலக்ஷ்மியும் என் உயிர்த்தோழிதானே.