Blog Archive

Tuesday, March 25, 2014

சில சில்.... நினைவுகள் 2

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
நினைவுத்தறி                 திருமணத்துக்கு  முதல் நாள்   மாப்பிள்ளை அழைப்பு.    பெருந்தேவிப் பெரியம்மா  இழைய இழைய வாரிப் பின்னி   தங்கமுலாம் பூசின குஞ்சலம்  வைத்து முடித்தார். அவருக்கு பூச்சடை தைக்க ஆசை.  மாப்பிள்ளை வீட்டாருக்கு அதெல்லாம் பிடிக்காது.  கண்ணுக்கு மையெழுதக் கூடாது. கோபுரம் மார்க்    கத்திரிப்பூ குங்குமம்  தான் வட்டமாக வைத்துக் கொள்ளணும். இந்த நீட்டப் பொட்டு  பாரிஜாத வழக்கம் இல்லை.  என்றெல்லாம் செய்தி வந்து சேர்ந்தது.   மையில்லாவிட்டால்  என்கண்கள் வெளியே தெரியாதே   என்று அம்மாவுக்குக் கவலை.    சரி.... செய்த அலங்காரத்தைக்   கலைக்கவேண்டாம். நாளைக்கு அவர்கள் இஷ்டப்படி  எல்லாம் செய்துவிடலாம் என்று பெரிய சிறிய தலைகள் பேசிக்கொண்டன.  பொண்ணைப் பார்க்கணும்.  என்று கனத்த குரல் ஒரு நடுவயது மாமி. ஒட்டியாணனும் வைரநெக்லஸும் ஆக நான் இருந்த  அறைக்கு வந்தார்.     என் தோழிகள் சிலபேர் நான் எந்த ஜிமிக்கி போட்டுக் கொள்ளவேணும்கற ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர்.வைரத்தோடோ என் காதை அழுத்திக் கொண்டிருந்தது. அதை அவிழ்த்து  இந்த  குட்டி ஜிமிக்கியைப் போட்டுக்கோ நாங்க விழாமப் பார்த்துக்கறோம்னு சொல்லிக் கொண்டிருந்தார்கள். இந்த அம்மா அப்போதான்  உள்ளே வந்தார்.        வந்தவர் முகத்தில் சிரிப்பே இல்லை.     நீதானா  ஆண்டாள்   என்றார். ஆமாம் என்றேன். நாட்டுப் புறமா  இருக்கே. ரேவதின்னு மட்டும் பத்திரிக்கையில் போட்டு இருக்கலாம்.போனாப் போறது. இரண்டு பேர் வைத்துக் கொள்ளும் வழக்கம் இன்னியோடு போச்சு.    அதே போல இப்படிச் சத்தம் போட்டுச் சிரிக்கக் கூடாது. கல்யாணத்துக்கு அப்புறமாக் கொஞ்சம் சிரிப்பைக் குறைத்துக் கொள்......இன்னும் என்னென்னவோ புத்திமதிகள்.  எனக்கென்னவோ வருத்தம் வரவில்லை. பெரியவர்கள் இப்படி ஏதாவது சொல்வார்கள் என்று  நினைத்துக் கொண்டேன். என்    தோழிகளுக்கு வாயடைத்துப் போச்சு.                  என்னப்பா இப்படிப் பேசுகிறார்.யார் இவர் என்றெல்லாம்   கேட்டார்கள். தெரியாது.அவங்க வீட்டில அத்தை அந்த மாதிரி இருக்கும் என்று விட்டுவிட்டேன்.  மணமேடைக்கு  மாப்பிள்ளை வந்தாச்சு.      பொண்ணும் நிச்சய தாம்பூலத்துக்கு வந்து உட்கார்ந்து   சீர் எடுத்துக்கணும்னு செய்தி வந்தது.   அறையின்    இன்னோரு வாயில் வழியாக  நானும் வந்தேன். பின்னாலயே என் அன்பு மாமி. பயப் படாம புடவை தடுக்காம போ. அவர் சிரிச்சுண்டு இருக்கார் பார். என்றார்.  நான் நிமிரவில்லை. உட்கார்ந்து அங்கிருக்கும் சீர்வரிசைத்தட்டுகளை மலைப்புடன் பார்த்தேன் விதவிதமான புடவைகள். கைப்பைகள்  முத்து மாலை செட் .சின்ன ஒட்டியாணம். அப்போ  கொடியிடைதான்}}}}}}        இன்னும்  முந்திரி போன்ற  உலர்ந்த வகைப் பழங்கள். அழகிய  இரண்டு மல்லிகை மாலைகள் மொத்தம் பதினோரு தட்டு  ,காரைக்குடி பழுக்காமரம் என்று சொல்வார்கள். அதில் செய்தவை. தட்டுக்களின் வேலைப்பாடே        பிரமிக்கவைத்தது. அதற்குள் சபையில் சலசலப்பு.        பெரிய மனிதர்களின் அணிவகுப்பு. அப்பா வந்தார் மாப்பிள்ளைக் கொடுக்கவேண்டிய      மோதிரம் , சூட் வகையறா  எல்லாம்  வைத்து இவரிடம் நீட்ட இவரும் வாங்கிக் கொண்டு எழுந்துபோனார். என்னையும் எழுந்திருக்கச் சொல்லி பாட்டியிடமிருந்து குரல். நானும் பச்சை வைர ஊசிப் புடவையை வாங்கிக் கொண்டு   என் அறைக்குப் போனேன்.  இவ்வளவு    கனமான  புடவையைக் கட்ட மாமிமார்கள் உதவினார்கள்.   மலைத்துபோகாதே. மாப்பிள்ளைதான் முக்கியம். மறக்காதே  என்றதும் எனக்கு கொஞ்சம் மூச்சு வந்தது. மீண்டும் மேடை. மந்திரங்கள் பத்திரிகை வாசிப்ப். இப்போ இரண்டு பேரும் பெரியவர்களைச் சேவிக்கலாம். தனித்தனியா வாங்கோ.என்றதும் காதருகில் குரல். 

நீயும் என்னோடு மேடைக்கு   அந்தப் பக்கம் இருக்கும் வாசல்வழியாக வந்துவிடு.  என்று.  ஏழெட்டுப்படிகள். முதல் படி...... அவர் இறங்கப் பின்னால் நான்.    பயப்படாதே   எங்க கொஞ்சம் சிரித்துக்கோ.என்றதும் உடனே  சிரிப்பு வந்துவிட்டது. சட்டென்று இறங்கிப் போய்விட்டார். அதற்குள் அவரது சகோதரிகள் கலாட்டா. படியிறங்க இரண்டுபேருக்கும்  இத்தனை நேரமா. சிம்மு நாளைக்குத்தாண்டா கல்யாணம்  என்று ஒரே கூச்சல். எனக்கோ மனமே இலகுவாகிவிட்டது. உலகத்தையே    அடைந்த திருப்தி.    கடைசியில் பெரிய மாமி மட்டும் என்னைப் பார்த்து சிரித்தவண்ணம் சொன்னார். அவர் சொன்னார் நீ அப்படியே  மந்திரம் போட்ட மாதிரி    அவர்    பின்னால் போயிட்டயே.எங்களைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை   ம்ம்.அவ்வளவுதானா.  சரிசரி. இந்த ராத்திரி எங்களோடுதான் இருக்கணும் . வந்து சாப்பிடுகிற வழியைப் பாரு   என்று அழைத்துப் போனார். எனக்கு மட்டும் அந்த அன்புக் குரலே  காதில் ஒலித்தபடி இருந்தது.

21 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சொன்ன விதம்... ஒவ்வொரு நிமிடமும் (திக் திக் +) இனிமை அம்மா...

Geetha Sambasivam said...

அருமையான நினைவலைகள். முதல் பேச்சு எப்போதுமே சுவாரசியம் தான்! வைர ஊசிப் புடைவை கனமாக் கனக்குமே! :))) என்னோட நிச்சயதார்த்தப் புடைவை 25 வருடங்களுக்கு அப்புறமா அரை மனசாக் கிழிய ஆரம்பிச்சது. :)))

Geetha Sambasivam said...

இதிலே ஃபான்ட் கொஞ்சம் பெரிசாப்போயிடுத்தோ?

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன். எழுதுவதா வேண்டாமா என்று யோசித்தேன் நல்ல நினைவுகளைச் சேமிப்பதில் மகிழ்ச்சியே. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமம் கீதா. பெரிய புடவைதான். விலை 210. என் புடவையைத் திருடன் கொண்டு போனான். வீட்டுக்குள் நுழைந்து நாங்கள் தூங்கும்போது வந்திருக்கிறான். இவர் ஊரில் இல்லை. எண்ணிப் பதினோரு வருடங்கள் என்னுடன் இருந்தது.எழுத்துக்கள் கண்ணுக்கு மிகவும் சிறிதாகத் தெரிந்ததும் ஃபாண்ட் பெரிசு செய்தேன். அது ராட்சசவடிவில் வந்துவிட்டது.

கோமதி அரசு said...

பயப்படாதே எங்க கொஞ்சம் சிரித்துக்கோ.என்றதும் உடனே சிரிப்பு வந்துவிட்டது.//

மகிழ்ச்சியான தருணம் அல்லவா!
பகிர்ந்தவிதம் அருமை அக்கா.

எண்ணி எண்ணி பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே!
என்னை அறியாமல் மனம் துள்ளி விளையாடுதே

என்ற பாடல் பகிர்ந்து இருக்கலாமே அக்கா.

ஸ்ரீராம். said...

பதிவில் எழுத்தின் அளவு மிகப் பெரியதாக இருக்கிறது.

மிகவும் சுவாரஸ்யமாக நினைவு கூர்ந்துள்ளீர்கள். சிரிக்கக் கூடத் தடை விதித்து மிரட்டிய அத்தையும், கணவரின் அன்பு+ஆதரவான குரலும்...

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, இதம் தரும் நினைவுகளை அசை போடுகிறேன். கொஞ்ச நேரமே என்றாலும் நெகிழத்தான் செய்கிறது நல்ல வாழ்வு தான் கொடுத்திருக்கிறார். தங்கச்சி இஷ்டப்படி பாட்டு போட்டாச்சு. ஓகேயா}}}}}}}

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் .அது அத்தையே இல்லை. இரு வீட்டுக்கும் வேண்டிய வேறு ஒரு பெண்மணி. ஆமாம் எழுத்துப் பெரிசாகிவிட்டது. இல்லாவிட்டால் எறும்பு மாதிரி தோற்றம் கொடுக்கிறது. வைத்தால் குடுமி கணக்குதான். பொறுத்துக் கொள்ளுங்கள். நன்றி மா.

ராமலக்ஷ்மி said...

இனிய நினைவலைகள்.

வெங்கட் நாகராஜ் said...

வைர ஊசி பட்டுப்படவை..... இப்பல்லாம் இந்த மாதிரி புடவை வருதாம்மா?

சில கல்யாணங்களில் இது மாதிரி யாராவது மிரட்டுவதைப் பார்த்தால் கொஞ்சம் நடுக்கம் இருக்கும்! :)

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராமலக்ஷ்மி. அலைகள் தான்.நெஞ்சின் அலைகள்.

வல்லிசிம்ஹன் said...

வெங்கட், வைர ஊசி என்று பெயர். வெள்ளி சரிகைக் கோடுகள் புடவையைச் சுற்றி நெருக்கமாக நெய்யப் பட்டிருக்கும். சிறப்பு நெசவு வேலை. சிலசமயம் தங்கத்தினால் ஆன ஜரிகை இழைகள். இப்போதுதான் ஜரிகை என்பதே போலி என்றாகிவிட்டது.அதனால் பயப்படாதீர்கள்.

Geetha Sambasivam said...

http://sivamgss.blogspot.in/2014/03/blog-post_26.html

வல்லி, இந்தப் பதிவில் உங்களுக்கு விமரிசனம் எழுத அழைப்பு ! முடிஞ்சால் கலந்துக்குங்க. :)))

கோமதி அரசு said...

பாடல் பகிர்வுக்கு மிகவும் நன்றி அக்கா.
இனிமையான பாடல் .

வல்லிசிம்ஹன் said...

நன்றி கோமதி. உங்கள் சிபாரிசால் நானும் இந்தப் பாடலைக் கேட்டு மகிழ்ந்தேன்.

துளசி கோபால் said...

மகிழ்ச்சியின் அளவை எழுத்தே சொல்லுது.

பூரிப்பு அதுக்கு மட்டும் வராதா:-)))))

வாசிக்கும்போதே எனக்கு மனசு நிறையுதுப்பா.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் துளசி. எழுதும்போது மனம் லேசாகிறது. எழுத்துப் பெரிதானது.பூரிப்போ. இன்னும் நினைத்துப் பார்க்கிறேன். நல்லது கிடைக்கும்.

G.M Balasubramaniam said...


எண்ண்ங்கள் சில நேரங்களில் கட்டுப்படுத்த முடியாது.கூடிய மட்டும் இனிய நினைவுகளை நானும் ரசிப்பதுண்டு இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு நினைவுகளை அசை போடும்போது நான் என்னிலிருந்து ஒரு மூன்றாம்மனிதன் நிலையில் திரைப்படம் போல் ரசிப்பதுண்டு நினைவுகளில் நானும் ஒரு பாத்திரமாகவே இருப்பேன். நான் இதை எழுதுவது சில நேரங்களில் நினைவுகள் சுமையாகி விடுவதுண்டு. சுமை தெரியாமல் இருக்க நம்மில் இருந்து விலகி நிற்கவேண்டும்

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ஜிஎம் பி சார். எழுதும்போது மனம் கனக்கத்தான் செய்கிறது. சக்தியே வடிந்து போகிறது. நீங்கள் இவ்வளவு தெளிந்த எழுத்துக்களுக்கு உரிமையானவர் என்று பார்க்கும் போது மனம் சந்தோஷப்படுகிறது எல்லோரின் சத்சங்கமும் வேண்டும். மிக மிக நன்றி சார்.

மாதேவி said...

இனிய நினைவலைகள் கண்டு மகிழ்ந்தோம்.