Blog Archive

Wednesday, January 14, 2015

முற்பகல், பிற்பகல்:)





எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

முற்பகல்........... 25  வருடங்களுக்கு  முன்னால்


வெள்ளிக்கிழமை,தை மாதம்  காலை வேலைகளை முடித்துவிட்டு வந்து
இராமயணம் சுந்தரகாண்டத்தைப்  படிப்பது  ஒரு வழக்கம் பிரபாவிற்கு.
விளக்கு பூஜை சேய்து முடித்தவுடன்,
அந்தப் பத்தரை மணி கெடுவிற்குள்(ராகு காலம் வந்து விடுமே)
எல்லாவற்றையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாதது வேறு கண்ணைச் சுழற்றியது.

இதெல்லாம் பார்த்தால்   செய்யும் காரியம்    நிறைவடையாது.
சின்னவனுக்கு நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கணும். பெரியவனுக்கு முதுகலை வகுப்பில்  படிக்க ஸ்காலர்ஷிப் வரவேண்டும்.

மஞ்சள் பிள்ளையாரைப் பிடித்து வைத்து
நெற்றியில்  குட்டிக் கொண்டு பிள்ளையாருக்குச்  சமர்ப்பிக்க அட்சதை கையில் எடுக்கவும்,
தொலைபேசி அடிக்கவும் சரியாக  இருந்தது.

கண்மண் தெரியாமல் கோபம் தலைக்கேறியது.

வீட்டில் தொலைபேசி  எடுத்துப் பேச ஒரு ஆள் வைக்கவேண்டும்.
இப்ப எந்தக் கரடி கூப்பிடுகிறதோ  தெரியவில்லையே
என்றபடி ''கத்தாத குறையாக'ஹலோ' என்று விளித்தாள்.


'வெளில போயிருந்தியாமா,.ஃபோன் எடுக்க இவ்வளவு நேரமாகி விட்டதே'

என்று அம்மாவின்  குரல்தான் மறுமுனையில்.
'நான்  எப்படிமா வெளில போவேன்.?
பாட்டும் நானே பாடறதும் நானே ரேஞ்சில வேலை.
இப்பதான்  வேலை முடிந்து மங்கா  போனாள்.
சரின்னு ராமாயணம் படிக்கலாம்னு உட்கார்ந்தேன்.
நீ ஃபோன்    பண்றே'
அலுப்பும் சலிப்பும் குரலில் தெரிய பெற்ற அம்மா என்கிற நினைப்பு கூட
இல்லாமல்  ஒலித்தது பிரபாவின்  குரல்.
பெண்ணின் குணாதிசாயங்களைத் தெரியாத அம்மா இல்லையே  தாய்.!

ஓ!சாரிமா.
முக்கியமான   விஷயம் .உன் பொண்ணுகிட்ட நீயே  சொல்லுன்னு அப்பா சொன்னார்.
நான் ராகுகாலம் முடிந்த  கையோடு உன்கிட்டப் பேசுகிறேன். நீ பூஜையைப் பூர்த்தி செய்மா'' என்று இதமாகப் பேசி அம்மா ஃபோனை வைத்து விட்டார்.

'ஏன் எனக்கு இப்படி  ஒரு வாய்த்துடுக்கு.  பாவம் அம்மா. அவர் எங்கயோ திருச்சியிலிருந்து பேசுகிறார்.
இப்படி  உனக்கு என்ன வேணும் இப்ப 'என்று  கேட்காத குறையாகப் பேசியிருக்க வேண்டாம்  என்றபடி பூஜை அறைக்குள் புகுந்தாள்.

செய்ய வேண்டிய பிரகாரம் அர்ச்சனைகள், நைவேத்யம் எல்லாம் முடித்து
வெளியே வருவதற்குள் வியர்த்து விறுவிறூத்துப் பசி
  வயிற்றைக் கிள்ள  ,ஒரு சிறு கிண்ணத்தில் குழம்பும் சாதமும் போட்டுக் கலந்து கொண்டு பொரியலையும் எடுத்து வைத்துக் கொண்டு
மேஜையருகே நாற்காலியையும் இழுத்துப் போட்டுக் கொண்டு
சாப்பிட உட்காரவும் 12  மணி ஆகிவிட்டது.


இப்ப திருச்சிக்கு ஃப்போன் செய்ய வேண்டாம். சாயந்திரம் பார்ர்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தபடி சாப்பிட்டு  விட்டுத் தொலைகாட்சியில்
வரும் பாட்டுகளைக் கேட்டபடியே  தூங்கியும் விட்டாள்.


மீண்டும் தொலைபேசி அடிக்கவும்  ,இன்னிக்கு இந்த
தூக்கமும் போச்சு.. இப்ப  எந்தப் புண்ணியவதி எந்த பாங்கிலிருந்து அழைக்கிறாளோ,  நீயும் ஆச்சு, உன் கிரெடிட் கார்டும் அச்சுனு ஃபோனைத் தூக்கிப் போடப் போறேன்'என்று முணு முணுத்தபடி,
இந்த மத்யான வேளைல கூப்பிடறதை நீங்க நிறுத்தினால் நன்றாக இருக்கும்
என்று காரமாக ஆரம்பித்தவளை அம்மாவின் மென் குரல்
நிறுத்தியது.


அச்சோ திருப்பியும் தொந்தரவு பண்ணீட்டேனா.
இல்லைமா சொல்லு. என்ன விஷயம்.
அப்பாவுக்கு எதாவது மருந்து வாங்கணுமா.'
என்றவளை
அதெல்லாம் இல்லைமா. பெரியவன்  படிப்பு விஷயமாக இங்க
திருவெறும்பூர்க் காலேஜுக்குப் போய் விசாரித்தார் அப்பா.
அவன் மதிப்பெண்களைப் பார்த்து அவர்கள் ஒரு வருடப்
படிப்புக்கான   செலவை  ஒரு தனியார் நிறுவனம் வழியாக
ஏற்பாடு செய்யலாம் என்று   சொன்னார்களாம்.
மாப்பிள்ளை அந்த நிறுவனத்தோட  சென்னைக்கிளையை
அணுகினால்  , அங்கிருப்பவர் வேண்டிய உதவியைச் செய்வார்'
என்று சொன்ன  அம்மாவை  ஓடிப்போய்க் கட்டிக் கொள்ளவேண்டும் போல
உடல் பறந்தது பிரபாவுக்கு.
உடனே கண்ணில்   கண்ணீரும் சேர்ந்து கொண்டது.
தான்க்ஸ் ம்மா. கார்த்தால உன்னைக் கடிக்காத குறையாப் பேசிட்டேன்.
ரொம்ப சாரிமா'என்றாள்'  அழாத குறையாக.
அடடா.எல்லாம் நல்லபடியாகத் தான் நடக்கிறது. இதெல்லாம் மனசில வச்சிக்காதே . ஆக வேண்டியதைச் செய்யுங்கோ'என்றபடி அம்மா ஃபோனை வைத்துவிட்டார்.

பிற்பகல்.
கணினி முன்னால் உட்கார்ந்து    கையில் காப்பிக் கோப்பையோடு
பெண்ணிடம் கணினித் தொலைபேசியில் பேசத் தயாரானாள் பிரபா.
இப்போ  எட்டு மணியிருக்கும் அங்கே. சாப்பிட்டு முடித்திருப்பார்கள்.
இந்த நாள்   எப்படிப் போச்சு என்று விசாரிக்கலாம்
என்றபடி பெண்ணின் வீட்டு நம்பாரைத் தட்டினாள்.
அடித்துக் கொண்டே இருந்தது தொலைபேசி.

ஏன் யாரும் எடுக்கவில்லை என்று யோசித்தபடி பேரனின்
கூகிள் அரட்டையில் டிங்  செய்தாள்.
ஹலோ  பாட்டி என்று ஒலித்த பேரன் குரல் கேட்டதும்.
சந்தோஷமாக  இருந்தது.
நான் ஹோம் வ்வொர்க் செய்யறேன் பாட்டி. அப்புறமா உன்னோட பேசட்டுமா'
என்ற பேரனின்  மரியாதையை மெச்சியபடித் தொடர்பைத் துண்டித்தாள். மீண்டும் கீழ்த்தளத்து எண்ணைத்   தட்டினாள்.
யாரும் எடுக்கவில்லை.
சரி பத்து நிமிடம் போகட்டும். உடனே  மனம் கேட்காமல் பெண்ணின் கைபேசியில் அழைத்தாள்.

'என்னம்மாஆஆ...!!!????

ஃஃபோன் யாருமே எடுக்கலியே. எங்கயாவது வெளியே வந்திருக்கியாம்மா'
என்று  இயல்பாகக் கேட்டாள்.
மறுமுனையில் வெடித்தது  பெண்ணின் குரல்.
ராத்திரி அதுவும் வார நாளில் நான் எங்கமா போகப் போறேன்.
பனி பொழிந்திருக்கிறது.
அது ஸாஃப்டாக இருக்கும்போதே   நீக்கிவிட்டால் தான் நாளை  காலை நாங்கள் வெளியே வர முடியும்..
பையனுக்கு நாளை  ஏதோ தேர்வுப் பரீட்சை.
அவனும் படித்துக் கொண்டிருக்கிறான்.

நீ என்னடா என்றால்  வெளிய போயிருக்கியான்னு கேட்கற..என்னம்மா.
நம்ம ஊரு மாதிரியா இங்க...
பிரபாவுக்கு வாய் அடைத்துவிட்டது. நான் என்ன பண்ணிட்டேன் இப்ப.
????

சரிம்மா அப்புறமா  உனக்குக் கூப்பிட்டுப் பேசறேன். நீ பாவம் உன் வேலையைப்   பாரு..''
என்றபடி,

அடுத்துத் தன்  ஈமெயில்களைப் படிக்கும்போது காரணமே இல்லாமல்,
அம்மா நினைவு வந்தது.





இந்தப் பதிவுவை மங்கையர் உலகத்திலும் இணைக்கப் படும்



http://ithu-mangayarulagam.blogspot.com/



Posted by Picasa

25 comments:

pudugaithendral said...

ரொம்ப நல்லா இருக்கும்மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றிமா தென்றல்.அன்புக்கு அடைக்கும் தாழ் இல்லை.
ஆனால் வேளை கெட்ட வேளையில் பாசத்தைப் பொழிவதும்
ரெண்டுங்கெட்டானாப் போகிறது.

சாந்தி மாரியப்பன் said...

போன் செய்பவர்களுக்கு அடுத்த முனையில் இருப்பவர்கள் இப்ப என்ன செஞ்சுட்டிருப்பாங்கன்னு தெரியாத சமயங்கள்ல, இந்தப் பக்கம் போனை அட்டெண்ட் செய்யறவங்க கொஞ்சம் பொறுமையாப் பேசறது நல்லதுதான். இல்லைன்னா பிற்பகல்ல வட்டியும் முதலுமா கிடைக்கும் :-))

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க வல்லிம்மா..

pudugaithendral said...

ஆனால் வேளை கெட்ட வேளையில் பாசத்தைப் பொழிவதும்
ரெண்டுங்கெட்டானாப் போகிறது.//

ஆமாம்மா. அனுபவப்பட்டவங்களுக்கு புரியும். :))

இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

பால கணேஷ் said...

தான் மகளாயிருக்கும் போது தெரியாதது அம்மாவாக இருக்கும் நிலையில் தெற்றெனப் புரிகிறது. பாசம், நேசம் எல்லாம் சூழ்நிலை தாண்டித்தான் என்பதை அருமையாகச் சொல்லியிருக்கீங்ககம்மா... பிரமாதம். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

முற்பகலும் பிற்பகலும் அருமை. மகள்கள் மாறுவதில்லை. தா(ய்மை)யும்!

அப்பாதுரை said...

பொல்லாத வட்டம்னு சொல்வாங்க.
அம்மாவிடம் மட்டும் தான் இப்படிக் காரணமில்லாமல் சலிச்சுக்க முடியும்ன்றதும் (கொஞ்சம் குற்ற உணர்வோடு கூடிய) உண்மை.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம்பா சாரல்.அதுவும் என் தோழி இருக்காளே அவளுக்கு எழுந்ததும் யாருடனாவது பேசணும்.நானோ பறந்து கொண்டிருப்பேன்.
கோல மாவுக்காரன் வந்தால் இங்க அனுப்பறியான்னு கேட்க அரை மணி நேரம் பேசுவாள்:)

வல்லிசிம்ஹன் said...

:)) நல்லாவே புரிந்து வைத்திருக்கிறீர்கள் தென்றல். வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கணேஷ். ஆடிப்பாடி ஓய்ந்த வயதுக்கும் நொடிப் பொழுது கூட உட்கார முடியாத இளவயதுக்கும் எத்தனை வித்தியாசம். உணர்ந்து கொண்டால் வாழ்க்கை அருமை.
வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம்.எதுவுமே மாறுவதில்லை. இடம்,சந்தர்ப்பங்கள் தான் மாறுகின்றன.என் அம்மாவின் தொலைபேசி அழைப்புக்குப் பின்னால்,அவளுடைய தனிமை இருக்கிறது என்பதை நான் புரிந்து கொள்ளவே வருடங்கள் பிடித்தன.

வல்லிசிம்ஹன் said...

கண்டிப்பா இது ஒரு விஷியஸ் சர்க்கிள் தான். துரை.
பொல்லாத ஆனால் கொஞ்சம் இனிமையான தொந்தரவு.
அப்பா பிள்ளை, அம்மா பெண். அம்மா பிள்ளை இப்படி ஒரு சங்கிலி. அம்மாக்கள் அம்புகளை வாங்கிக் கொள்ளும் சக்தி படைத்தவர்கள் கண்ணனைப் போல.ஆனால் ஒன்று எங்க அம்மா போல எனக்கு பொறுமை கிடையாது:)

Geetha Sambasivam said...

எனக்குப் பிரச்னையே இல்லை; என்னை யாராவது கூப்பிட்டுப் பேசினால் தான் உண்டு; நானாக யாரையும் அழைத்துப் பேசுவதில்லை அவசரமோ, அவசியமோ இருந்தால் தவிர. அப்போவும் நேரம், காலம்னு யோசித்துத் தான் கூப்பிடுவேன். உள்ளூராய் இருந்தால் மாலை மூன்றிலிருந்து ஆறுக்குள்ளாக. வெளியூர் எனில் இரவு ஒன்பது மணிக்கு மேல். வெளிநாடு என்றால் அவங்க நேரத்தைப் பொறுத்து அவங்க இரவு. இல்லைனா வாய்ஸ் மெசேஜ் கொடுத்துடுவேன். :))))))))))))

Geetha Sambasivam said...

நம்ம ரங்க்ஸ் ஆபீஸ் டூர் போனாலே கூப்பிட்டுப் பேசினது இல்லை.:)))))))அவசியமான சமயம் கூப்பிட்டுத் தந்தி பாஷையில் சொல்லிடுவேன். அவரும் அப்படியே! மோனோசிலபிலில் தான் பதில் வரும். :)))))))))

வல்லிசிம்ஹன் said...

கொடுத்த வைத்த சிலரில் நீங்களும் ஒருவர் கீதா.!இந்த மனவல்லமை வாய்ப்பது சில பேருக்கே வாய்க்கும்.
எங்கள் வீட்டிலும் பசங்க அவர்களே செய்துவிடுவார்கள்.
பெண் என்பதால் நான் அடிக்கடி விசாரித்துக் கொள்ளுவது வழக்கம்:)
அதுவும் செலவில்லாமல் கிடைக்கும் மாஜிக் ஜாக்!!
மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துகள் மா.
எங்க வீட்ல டூர் போகும்போது பேச்சே கிடையாது. மாமியார் சொல்வார் ''வேலை முடிஞ்சா தானே வரப் போறான்'நீயேன் வாசலுக்கும் உள்ளுக்கும் அல்லடறே:)

Geetha Sambasivam said...

பொங்கல் வாழ்த்துகள் வல்லி, அங்கே போகிக் கொண்டாட்டம் ஆரம்பிச்சிருக்கும். :)))

திண்டுக்கல் தனபாலன் said...

முற்பகலும் பிற்பகலும் மிக மிக அருமை! தங்களின் அனுபவங்கள் அற்புதம்! படங்களும் நல்லா இருக்கு! பாராட்டுக்கள்! இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள் மற்றும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! நன்றி! அன்புடன் அழைக்கிறேன் : "பாராட்டுங்க! பாராட்டப்படுவீங்க!"

Unknown said...

உங்களின் அனுபவங்களில் வெளியான முற்பகல் பிற்பகல் மிகவும் அருமை.. உங்களின் இந்த புகைப்படம் நமது மங்கையர் உலகம் வலைப்புவில் இணைக்கப்பட்டுள்ளது.. வாழ்த்துகளும் நன்றிகளும்

Yaathoramani.blogspot.com said...

யதார்த்த உலகில் மனித மன நிலைகளை
அருமையாகச் சொல்லிப் போகும் அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

மாதேவி said...

அருமை.

அம்மா பெண்ணு பாசம் தொடர்கதை....

ஹுஸைனம்மா said...

இங்கே, “பிற்பகல்” இப்பவே ஆரம்பிச்சாச்சூ!! பையன் டீனேஜர் - கேக்கணுமா!! :-))))

வல்லிசிம்ஹன் said...

வரணும் மாதேவி. தொட்டர்கதை. இது புரிந்து கொள்ள வயசு ஏறவேண்டி இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

வாங்க ஹுசைனம்மா, அங்கயுமா. 12 வயசிலயே டீன் ஆரம்பிச்சுடுதோன்னு எனக்குச் சந்தேகமா இருக்கு:)
பொண்ணு வீட்லயும் ஒரு பதிமூணு அட்டகாசமா நடந்துகிட்டு இருக்கு.!!

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்

yathavan64@gmail.com said...

அன்புடையீர்!
வணக்கம்!
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

நட்புடன்/நன்றியுடன்,
புதுவை வேலு