Blog Archive

Tuesday, October 18, 2011

பசுமை என்றும் வாழ்வில் நிலைக்கப் பகிர்ந்து கொள்ளவேண்டும்




எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
    சற்றே    நீண்ட  கதை.:)  தீபாவளி  ஸ்பெஷல்(நாற்பது வருடங்களுக்கு முன்னால் ஒரு தீபாவளி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 
வாயிலைப் பார்த்தபடி போட்டிருந்த சாய்வுநாற்காலியில்
சாய்ந்த வண்ணம் தன்னைத் தாண்டி போகிறவர்களையும்
இருந்து பேசுபவர்களையும் கவனித்த வண்ணம் இருந்தார் விஜயாப் பாட்டி.

கண்சதை வளர்ச்சிக்கான அறுவைசெய்த பிறகு கண்கள் மிக நன்றாகத் தெரிந்தன.
குப்பையைக் கொட்டும் பாவனையில்  பக்கெட்டையும்
 எடுத்துச் செல்லும்  ரங்கம்மா,

விளையாட்டுக்காக புளி உப்பு இரண்டையும் சமையலறையிலிருந்து எடுக்கும் கொள்ளுப் பேத்தி

பென்சில் வாங்கக் காசு கேட்பதற்காகத் தயங்கி நிற்கும்  கொள்ளுப் பேரன்,

விசாலமாக எழுப்பப் பட்ட  ஆஸ்பெஸ்டாஸ்  கொட்டகையின் கீழே
நான்கு ஐந்து  கார்களை (உதவிக்கு வைத்திருக்கும் மெக்கானிக்குகளின் துணையோடு)

ரிப்பேர் செய்து கொண்டிருக்கும்  பேரன்.


ஸ்வாமி அறையில் இராமாயணம் படித்துக் கொண்டிருக்கும்  மருமகள்.
வசந்தா.

அந்த மருமகளின் மருமகள்(பேரனின் பெண்டாட்டி) சந்திரா  ஒருஅறையிலிருந்து
 இன்னோரு அறைக்கு விரைந்து கொண்டிருப்பதையும்
 ஒரே  நோட்டத்தில் பார்த்துவிட்டுக் கையில்  இருக்கும் புத்தகத்தின் பக்கத்தைப் புரட்டினார்.
தீபாவளிக்கு இன்னும் ஒரு நாலு நாள் தான் இருக்கிறது.

பேரன் குடும்பத்துக்கு  என்ன வாங்கித் தரப் போகிறான். இந்த ரேசன் காலத்தில் பா(ல்)ம் ஆயில்  கிடைக்குமா.
என்னவெல்லாமோ கவலை பாட்டிக்கு.

சாப்பிட உள்ளே வந்த பேரனிடம் ,
''தீபாவளி வருதேடா, குழந்தைகளுக்கு ஜவுளி எடுக்கவேண்டாமா?"
என்றாள்.
ம்ம்  வாங்கலாம். கஸ்டமர் வண்டி இன்னிக்குப் போய்விடும்'
ஒரு ஆயிரம் ரூபாய் கிடைக்கும். வேலை செய்யும் பசங்களுக்கு ஐன்னூறு ரூபாய் கொடுத்துவிட்டால்
 மிஞ்சும் ஐன்னூறில் குழந்தைகளுக்கு ரெடிமேட் எடுத்துவிடலாம்'' என்ற வண்ணம்
நகர்ந்த பேரனைச் சலிப்போடு பார்த்தாள் பாட்டி.
மருமகள் வசந்தாவை விளித்தாள்.
நீயாவது ஏதாவது செய்யக் கூடாதாமா. அந்தப் பெண்(பேரன் பெண்டாட்டி)
புதுசு போட்டுக்க வேண்டாமா. ஒரு ஒக்கோரையாவது
மனோகரமாவது  செய்யவேண்டாமா.


கேட்டார்.
கோ ஆப்டெக்ஸ்  அட்டை இருக்குமா. சிரமம் ஒண்ணும் இல்லை.
எல்லாம் சமாளிக்கலாம்மா என்ற வண்ணம் மதியம் காப்பி டிபனுக்கு ஏற்பாடு செய்யச் சந்திரா
விரைந்துவிட்டாள்.

 பாட்டிக்குப் பிடித்த குணுக்குப் பலகாரத்தையும், இலையில் வைத்து
அப்போது இறக்கின டிகாக்ஷனில் போட்ட காப்பியை வெள்ளி டம்ப்ளரிலும்
ஒரு மரத்தட்டில் கிண்ணத்தில் வைத்துக் கொடுத்தாள்.'

பேசாம இருக்கியே அவன்கிட்டக் கேட்டு நல்ல புடவையா வாங்கிக்கக் கூடாதோ என்று
 ஆதங்கத்தோடு கேட்கும் பாட்டியை
 ஏதாவது  வாங்கிடலாம்   பாட்டி''சமாதானப் படுத்திவிட்டுக் குழந்தைகளின்
 வீட்டுப் பாடத்தைக் கவனிக்கச் சென்றாள்.

அடுத்தநாள் குழந்தைகள் வந்ததும்  பெண்ணுக்குப் பிடித்த பாவாடை சட்டையும்  மகன்கள்

 இருவருக்கும் பாண்ட்  சட்டைகளும் முந்நூறு ரூபாய்க்குள் வாங்கி வந்துவிட்டாள் சந்திரா.

டியூசிஎஸ் கடையில் விற்ற நல்லெண்ணெய், சீயக்காய்த் தூள்,  விதவிதமான பட்டாசுகள்,

 மத்தாப்புகள் எல்லாம் வீடு வந்து சேர்ந்ததும் குழந்தைகளின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

பக்கத்துவீட்டு மருதாணி மரத்திலிருந்து ஒரு பை நிறைய இலைகளைப் பறித்து வந்த பெண்ணிற்கு
இரவு சாப்பாடு முடிந்ததும்,
கைகள் கால்களில் மருதாணி இட்டுவிட்டுத் தானும் வைத்துக் கொண்டாள்.

மருதாணிவைக்கும்போது அம்மாவின் நினைவு வர ,பழைய தீபாவளிகளைப் பற்றிக்
குழந்தைகளிடம் சொல்லியபடியே அன்றிரவு  கழிந்தது.

மறுநாள்  பாட்டியிடம் கேட்டுக் கொண்டு  பச்சரிசி,உளுந்து,கடலைப் பருப்பு ,பயத்தம்பருப்பு இவையெல்லாம்
 கொடுத்துவிட்டு வீதிமுனையில் இருக்கும் மாவு மெஷினில்
 ரங்கம்மாவிடம் சொல்லி அரைத்து வைத்தாள்.
அன்று பகல்தான் எல்லோருக்கும் ஒரு ஆச்சரிய அதிர்ச்சி காத்திருந்தது.

வாசலில் ஆட்டோ நிற்கும் சத்தம் கேட்டுப் பாட்டி'யாரூன்னு போய்ப் பாரு.
 தீபாவளிக்கு முதல்நாள் யார் வரப் போகிறா என்றதும்,

கதவைத் திறந்த சந்திராவுக்கு ஒரு நிமிடம் பேச்சே வரவில்லை.
''சம்பந்தியா  வாங்கோ வாங்கோ  வாம்மா ஜயா, நாராயணன்
வாங்கோ.
வசந்தா உன் சம்பந்திகள் வந்திருக்கா பாரு''என்று பாட்டியின் குரல் உச்சஸ்தாயியில்
சென்றது.

அம்மாவின் கையில்  இருந்த  வயர் கூடையில் பழங்களும் வெற்றிலை பாக்கு மஞ்சள்
இருப்பது தெரிந்தது.
அப்பாவும் மெதுவே உள்ளே வந்தார்.
இருவரும் பாட்டியை நமஸ்கரித்தனர்.
''எங்களுக்கு  சென்னைக்குப் பக்கத்தில் அச்சரப் பாக்கத்துக்கு மாற்றலாகி இருக்கிறது..இப்பதான் ஒருவாரம் ஆகிறது.
ஜயாவின் தம்பிக்குத் திருமணம் நிச்சயம் ஆகிறது.
அதற்காக  மாம்பலம் கிளம்பிவந்தோம். அப்படியே மைலாப்பூருக்கும் வரலாம் என்று வந்தோம் என்றார்.

''சந்திரா கொஞ்சம் ஒரு தாம்பாளம் எடுத்து வரயாம்மா என்றதும்,
முதலில் அவர்களுக்குக் காப்பி ஏதாவது கொடு. என்ற வண்ணம் வசந்தம்மாவின் குரல்
 கேட்டுச் சந்திரா தன்னிலைக்குத் திரும்பினாள்.
எப்படிம்மா இருக்க அப்பா நீ எப்படி இருக்க. வயிற்று வலி தேவலையா,
என்றபடி தாம்பாளத்தையும் கொண்டுவந்தாள்.
உன் தம்பி சிங்கப்பூரிலிருந்து மருந்து வரவழைத்துக் கொடுத்தான்மா.அவனுக்குத்
தெரிந்த பைலட் தினம் அங்கு சென்று வருவாராம்
என்று சொல்லித் தன் கையிலிருந்த்க பையிலிருந்து ஒரு எட்டு முழ வேட்டியும்,
ஒரு  பாம்பே டையிங் துண்டும் எடுத்து வைத்தார்.
சந்திராவுக்கு மிகவும் பிடித்த கடாவ் டெரகோசா  புடவை அடுத்ததாக வெளியே வந்தது.
மனதை அள்ளும் மெல்லிய மஞ்சள் நிறத்தில் பச்சைக் கொடிகள் சுற்றி வரும் அந்தப் புடவையின் அழகு
இதமாக இருந்தது.

என்ன மாமா என்று கேட்டபடியே  க்ரீஸ் படிந்த கைகளோட வந்த மாப்பிள்ளையைப்
பார்த்து இருவரும் எழுந்தார்கள்.

கூடத்தில் வைக்கப் பட்டிருந்த   பொருட்களைப்
பார்த்து  எனக்கு என்ன வேண்டும் என்று எங்க மாமாவுக்குத்தான் தெரியும் என்ற வண்ணம் சிரித்தபடி
உள்ளே சென்ற  மகனை  அம்மா'' வந்து உட்காருடா''' என்று அழைத்தார்.
அதற்குள்  வேட்டி துண்டுக்கு மேல் மாப்பிள்ளைக்குச் சட்டை வாங்க ஒரு நூற்றியோரூ
 ரூபாயும் வைத்தார் நாராயணன்.
அதன் பின்னே ஒரு எவர்சில்வர் டப்பாவில்  திரட்டிப் பாலும், இன்னோரு டப்பாவில்
 தேங்காய் பர்ஃபியும் அம்மா வைத்தார். இன்னோடு குட்டி டப்பாவைப் பார்த்ததுமே சந்திரா என்னவென்று  கண்டு கொண்டாள். ''மருதாணியாம்மா'' என்று அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

''தீபாவளி  அமர்க்களமா  இப்பவே வந்தாச்சு. வந்தாச்சு. நாராயணா, ஜயா இரண்டு பேரும் இருந்து சாப்பிட்டு விட்டுப் போங்கோ
என்று வாயார  அவர்களை உபசரித்தார் .
தயங்கியவர்களை  மாப்பிள்ளை வற்புறுத்த  பிறகு சம்மதித்தனர்.

அன்று  இரவு அவர்களை பஸ் நிறுத்தத்திற்குச்  சென்று 12 பி  பஸ்ஸில் ஏற்றிவிட்டுத் திரும்பிய
சந்திராவின் மனம்
சுற்றிவெடிக்கும் பட்டாசுகள் மத்தாப்புகள் வெளிச்சத்தை விட பல மடங்கு ஒளிர்ந்தது.

வருடம் தவறாமல் இந்த வழக்கத்தைக் கடைப் பிடித்த பெரிய தம்பி,சின்னத்தம்பி இருவரின் நினைவுக்கும் நன்றியுடன் எழுதப்பட்ட பதிவு.








Posted by Picasa

24 comments:

ஸ்ரீராம். said...

எதிர்பாரா வரவுகளிலும் இனிமையான ஆச்சர்யங்களிளும்தான் வாழ்க்கை நகர்கிறது. இனிமையான தீபாவளிதான்

குறையொன்றுமில்லை. said...

இந்தக்கதை படித்ததும் நானும் 50- வருஷம் முன்பு நடந்த என் தலை தீபாவளி நினைவுகளில் மூழ்கிவிட்டேன். நல்லா எழுத்து நடை.

கோமதி அரசு said...

அக்கா, அருமையான தீபாவளி.

பாட்டி, அத்தை, பேரன், மருமகள் எல்லோரும் அருமையான அன்பான உள்ளங்கள்.

பேத்தி சந்திராவின் முகம் மத்தாப்பாய் ஜொலித்து வரப்போகும் தீபாவளி பண்டிகையை சிறப்பாக்கி விட்டதே.
பசுமை என்றும் வாழ்வில் நிலைக்கட்டும்.

ராமலக்ஷ்மி said...

//இன்னோடு குட்டி டப்பாவைப் பார்த்ததுமே சந்திரா என்னவென்று கண்டு கொண்டாள். ''மருதாணியாம்மா'' என்று அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.//

இந்த அன்பிற்கு ஈடேது? மிக அருமையான பகிர்வு.

geethasmbsvm6 said...

உங்கள் தீபாவளி அனுபவங்களைப் போல் எனக்கும் உண்டு. அதிலும் இந்த கோ ஆப்டெக்ஸ் கை கொடுத்தாற்போல் வேறெதுவும் கை கொடுத்ததில்லை. இனிய தீபாவளி வாழ்த்துகள்.

அப்பா, அம்மா வைத்த பெயர் சந்திராவா??

அப்பாதுரை said...

சின்ன சின்ன surpriseகள் விழா நாட்களில் பெரிய impact ஏற்படுத்தும். சரியே.
கதையா வாழ்க்கை நினைவா? படத்துல யாரு?

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம்,அந்தத் தீபாவளி உண்மையாகவே மறக்க முடியாததுதான். பெரியவர்களின் அன்பு எங்களைக் காத்து வந்தது. இன்னும் காக்கும். மிகமிக நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு லக்ஷ்மி, நம் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைக் கோர்த்தால் பெரிய நாவல்கள் மலையையே எழுப்பி விடலாம்.:)
மிகவும் நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தங்கச்சி கோமதி,ஆமாம், சங்கடங்கள் வரும் நேரம் வரும் தெய்வங்கள் நம் தாய்தந்தையர்தான்.
அழைத்துக் கூட வரவில்லை. தானாகவே கிடைத்த வரங்கள் அவர்களது கொடை.
என் மாமியார், அவருடைய மாமியார் எல்லோரும் கண்டிப்பாக இருந்தாலும் நேர்மை வழியிலிருந்து சிறிதும் தவறாதவர்கள்.

முன் ஜன்ம புண்ணியம் என்னை இவர்களிடம் சேர்த்தது.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ராமலக்ஷ்மி அன்னையருக்குத் தெரியாத ரகசியமோ, ஆசையோ நம்மிடம் உண்டா.
அம்மா ,அம்மாதான்.எங்கிருந்து யார் பறித்துக் கொடுத்தார்களோ. அப்போது அவர்களிடம் மிக்ஸி கூட கிடையாது.
அம்மியில் அரைத்து மையாக ஒரு இலை கூடத்தெரியாமல்,பச்சென்று பற்றிக்கொண்ட மருதாணியின் சிவப்பு அம்மாவின் பாசம்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா. கோஆப் டெக்ஸ் போனால் கையில் காசு மிஞ்சும்.ஏதோ ஒரு நெசவாளிக்கு நம்மால் ஆன உதவி.
சரியாகக் கண்டுபிடித்தீர்கள். சந்திர லேகா ,சந்திரா ஆகிவிட்டாள் இந்தக் கதையில்:)
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் துரை. எங்கள் வாழ்க்கை முழுவதும் சிறிய சர்ப்ரைஸ்களால் ஆனதுதான்.
படத்தில் இருப்பது எங்கள் அம்மாவும் அப்பாவும். திரு .நாராயணன் அண்ட் திருமதி ஜயா நாராயணன்.

மாதேவி said...

பதிவு உருகவைத்தது. எனது பெற்றோரையும் நினைத்துக்கொண்டேன்.

உங்கள் தெய்வங்கள் எங்கள் மனங்களில் நிறைந்துவிட்டார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி மேலும் மேலும் உங்களை அறியவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறீர்கள். பெற்றோரைப் பற்றி பதிவிடலாமே. இத்தனை அன்பான பெண்ணைப் பெற்றவர்கள் பற்றி நாங்களும் தெரிந்து கொள்வோமே.

தி. ரா. ச.(T.R.C.) said...

மகிழ்ச்சி என்பதே மற்றவர்கள் நமக்கு தருவதும் நாம் மற்றவர்களுக்கு தருவதுதான் என்பதை நாசூக்காக சொன்னதற்கு நன்றி வல்லியம்மா. இரண்டு நாள் மும்பையில்வேலை அதான் லேட்

நானானி said...

ரொம்ப ரசிச்சேன். செம்மையாக கழிந்த தீபாவளி...அதன் நினைவுகள்,மத்தாப்பு போல் ஒளிர்ந்த பின்னும் நீரு பூத்த நெருப்புப் போல் இன்றும் கனன்று கொண்டிருக்கிறது. அருமை.

நானானி said...

எனக்கும் ஆரம்ப நாட்களில் கோ-ஆப்டெக்ஸின் 3000 ரூபாய் கூப்பன்கள் பேருதவியாயிருந்தெல்லாம் நினைவிருக்கிறது.

திவாண்ணா said...

நல்ல நினைவுகள்! ஆனா கதையா, வாழ்கை நிகழ்வான்னு கடைசி வரை புரியலை!

வல்லிசிம்ஹன் said...

கதை பாதின்னு சொல்லலாம். பெயர் மாறி இருக்கறதுனால. மத்தபடி நடந்ததுதான் தம்பி வாசுதேவன்.

சாந்தி மாரியப்பன் said...

நல்லதொரு நினைவலைகள் வல்லிம்மா.

Unknown said...

அனுபவங்கள் கற்பனையோடு கலந்து உருவாவதுதானே கதை. கதையின் நடை அருமையாக இருக்கிறது

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் சாரல். பழசை எப்பவும் மறக்கக் கூடாது என்று மாமியாரும் என் தந்தையும் அடிக்கடி நினைவுறுத்துவார்கள்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் வியபதி.
வருகைக்கும் கருத்துக்கும் மிக மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் திராச பகிர்ந்து கொள்வதில் இருக்கும் சந்தோஷம் வேறெதில் கிடைக்கும். மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துகள்.